தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை எனும் அழகிய சிறு நகரத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் திருக்கோவில். ஊரின் எல்லையில் நின்று ஊரைக் காக்கின்ற அன்பான அன்னை அவள்.
அம்மனை நாடி வந்து வேண்டும் ஒவ்வொருவரின் நாடித்துடிப்பை அறிந்து அருள்பாலிக்கும் கருணை உள்ளம் கொண்டவள் நாடியம்மன். நகரின் இரைச்சல்களுக்கு அப்பாற்பட்டு, அமைதியான இடத்தில் குடிகொண்டு அருள்கிறாள் ஸ்ரீ நாடியம்பாள். கோவிலை ஒட்டி அழகிய குளம் ஒன்று இருக்கிறது. அதில் மலர்ந்து சிரித்து கண்ணடிக்கும் ஆயிரம் தாமரைப் பூக்கள். அக்குளக்கரையில் அமர்ந்தால், தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் வீசும் தென்றல் காற்று.
சித்திரை
மாதம் நடக்கும் நாடியம்மன் திருவிழா மிகவும் பிரசத்திப்பெற்றது.
சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்து எல்லோருமே திருவிழாவிற்கு குடும்பம்
சகிதமாக வந்து அம்மனை தரிசித்து அருள்பெற்று செல்வார்கள். அந்த நாட்களில்
நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி
நிறந்திருக்கும். குறிப்பாக விழா நிறைவில் நடக்கும் தேரோட்டம் சிறப்பு
வாய்ந்தது. நகரை வலம் வரும், ஊர் கூடி இழுக்கும் அழகியத் தேர். அது நகரைச்
சுற்றி வந்து தேரடித் தெருவில் நிலை பெறும் வரை ஊரெங்கும் உற்சாகம்
கரைபுரண்டு ஓடும்.
இந்த அனுபவம் கிடைக்க, பட்டுக்கோட்டைக்கு ஒரு முறை அவசியம் சென்று ஸ்ரீ நாடியம்மனை வணங்கி, அம்மனின் அருள் பெற்று வாருங்கள்.
அம்மனின் அருளோடு
இராம்ஸ் முத்துக்குமரன்.



