Chidhambaram Natarajar Temple

Sivam

சிவபுராணம்

மாணிக்கவாசகர் அருளியது

எட்டாம் திருமுறை- திருவாசகம்
நாடு      :பாண்டியநாடு
தலம்     : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
சிறப்பு  : சிவனது அநாதி முறைமையான பழமை; கலிவெண்பா.

(வாசிப்பதற்கு எளிதாக இருக்கும் வண்ணம் பிரித்து பதிவிட்டுள்ளேன். மூலப்படிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.)

திருச்சிற்றம்பலம்!!!

நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!                                       (2)

கோகழி ஆண்ட
குருமணி தன் தாள் வாழ்க
ஆகமமாகி நின்று
அண்ணிப்பான் தாள் வாழ்க!                               (4)

ஏகன் அனேகன்
இறைவனடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட
வேந்தனடி வெல்க!                                                 (6)

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன்
பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன்
பூங்கழல்கள் வெல்க!                                            (8)

கரம் குவிவார் உள்மகிழும்
கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும்
சீரோன் கழல் வெல்க!                                        (10)

ஈசனடி போற்றி
எந்தையடி போற்றி
தேசனடி போற்றி - சிவன்
சேவடி போற்றி!                                                    (12)

நேயத்தே நின்ற
நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும்
மன்னனடி போற்றி!                                           (14)

சீரார் பெருந்துறை நம்
தேவனடி போற்றி
ஆராத இன்பம்
அருளும் மலை போற்றி!                                  (16)

சிவன் அவன் என்
சிந்தையுள் நின்றதனால்
அவன் அருளாலே
அவன் தாள் வணங்கிச்                                   (18)

சிந்தை மகிழச்
சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும்
ஓய உரைப்பன் யான்                                      (20)

கண்ணுதலான் தன் கருணைக்
கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா
எழிலார் கழல் இறைஞ்சி                               (22)

விண்ணிறந்து மண்ணிறைந்து
மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை
இலாதானே நின் பெருஞ்சீர்                         (24)

பொல்லா வினையேன்
புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப்
புழுவாய் மரமாகிப்                                       (26)

பல் விருகமாகி
பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப்
பேயாய்க் கணங்களாய்                              (28)

வல் அசுரராகி
முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்
தாவர சங்கமத்துள்                                      (30)

எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள்
கண்டின்று வீடுற்றேன்                               (32)

உய்ய என் உள்ளத்துள்
ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா
விடைப்பாக வேதங்கள்                              (34)

ஐயா என ஓங்கி
ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய்த் தணியாய்
இயமான னாம் விமலா                              (36)

பொய் ஆயின எல்லாம்
போய் அகல வந்தருளி
மெய் ஞானமாகி
மிளிர்கின்ற மெய்ச்சுடரே                         (38)

எஞ்ஞானம் இல்லாதேன்
இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை
அகல்விக்கும் நல்லறிவே                           (40)

ஆக்கம் அளவு
இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய்க் காப்பாய்
அழிப்பாய் அருள்தருவாய்                        (42)

போக்குவாய் என்னைப்
புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்
சேயாய் நணியானே                                 (44)

மாற்றம் மனங்கழிய
நின்ற மறையோனே
கறந்தப் பால் கன்னலொடு
நெய்கலந்தாற் போலச்                             (46)

சிறந்தடியார் சிந்தனையுள்
தேனூறி நின்று
பிறந்தப் பிறப்பறுக்கும்
எங்கள் பெருமான்                                     (48)

நிறங்கள் ஓர் ஐந்துடையாய்
விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான்
வல்வினையேன் தன்னை                       (50)

மறைந்திட மூடிய
மாய இருளை
அறம் பாவம் என்னும்
அருங் கயிற்றால் கட்டிப்                         (52)

புறந்தோல் போர்த்தெங்கும்
புழு அழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது
வாயிற் குடிலை                                        (54)

மலங்கப் புலனைந்தும்
வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால்
விமலா உனக்குக்                                     (56)

கலந்த அன்பாகிக்
கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத
சிறியேற்கு நல்கி                                     (58)

நிலந்தன் மேல் வந்தருளி
நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க்
கிடந்த அடியேற்குத்                               (60)

தாயிற் சிறந்த
தயாவானத் தத்துவனே
மாசற்ற சோதியே       
மலர்ந்த மலர்ச்சுடரே                            (62)

தேசனே தேனார்
அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப்
பாரிக்கும் ஆரியனே                            (64)

நேச அருள் புரிந்து
நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்றப்
பெருங்கருணைப் பேராறே                (66)

ஆரா அமுதே
அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து
ஒளிக்கும் ஒளியானே                           (68)

நீராய் உருக்கி என்
ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும்
இல்லானே உள்ளானே                         (70)

அன்பருக்கு அன்பனே
யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே
தோன்றாப் பெருமையனே                 (72)

ஆதியனே அந்தம்
நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட
எந்தைப் பெருமானே                           (74)

கூர்த்தமெய் ஞானத்தால்
கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே
நுணுக்கரிய நுண் உணர்வே              (76)

போக்கும் வரவும்
புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே
காண்பரிய பேரொளியே                    (78)

ஆற்றின்ப வெள்ளமே
அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச்
சொல்லாத நுண் உணர்வாய்             (80)

மாற்றமாம் வையகத்தின்
வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத்
தெளிவே என் சிந்தனையுள்               (82)

ஊற்றான உண்ணார்
அமுதே உடையானே
வேற்று விகார
விடக்கு உடம்பின் உட்கிடப்ப             (84)

ஆற்றேன் எம் ஐயா
அரனே ஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்து இருந்து
பொய்கெட்டு மெய்யானார்                (86)

மீட்டு இங்கு வந்து
வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக்
கட்டழிக்க வல்லானே                           (88)

நள்ளிருளில் நட்டம்
பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே
தென்பாண்டி நாட்டானே                     (90)Sivam

அல்லல் பிறவி
அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச்
சொல்லித் திருவடிக்கீழ்ச்                     (92)

சொல்லியப் பாட்டின்
பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின்
உள்ளார் சிவனடிக் கீழ்ப்                       (94)

பல்லோரும் ஏத்தப் பணிந்து!               (95)

திருச்சிற்றம்பலம்,

 

பாடலின் மூல வடிவம்

திருச்சிற்றம்பலம்,

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்,

தொடர்புடைய கட்டுரைகள்

Shivalingam

நற்றுணையாவது நமச்சிவாயவே...

சீர்காழி சட்டைநாதர்

இறைவன் எழுதிக் காட்டும் மொழி எது தெரியுமா?

நாலுவரியில் இராமாயணம்

நாலுவரியில் இராமாயணம்

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net