நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
(23 ஜனவரி 1897 - 18 ஆகஸ்டு 1945)
வங்கத்தில் தோன்றிய தங்கமிவர்
பாரதம் எங்கும் கரிஜித்து
பீடு நடை போட்ட சிங்கமிவர்!
இவர் பின் சென்றிருந்தால்
அன்று
பாரதப் பிரிவினை
நடந்திருக்காது,
பாரிலே அதன் மதிப்பு
குறைந்திருக்காது,
பரம்பரை ஆட்சி இங்கு
நடந்திருக்காது - நம்
பழம்பெருமை பெருமளவு
மறைந்திருக்காது!
இளைஞர் சக்தியை
ஒன்றிணைக்க
கலங்கரை விளக்கமாய்
இருந்தவர் - நம்
வளங்களைக் கொள்ளை
அடித்தவர்கள் - தினம் தினம்
கலங்கிடும் வண்ணம்
திகழந்தவர்!
அவரது
வட்டவட்ட விழிகளிரண்டும் - எதிரிகளை
சுட்டுப்பொசுக்கிடும் கனலாய் எரியும்,
கிட்ட வந்து பார்த்திடும் பொழுது
கட்டுப்பட்ட அன்பு கருணை எல்லாம்
கனிவாய்த் தெரியும்!
ஐம்பொன்னாய் திகழ்ந்த உத்தமர்
பசும்பொன்னை நமக்குத் தந்தவர்
தாய்மண்ணைக் காக்க தம்முயிரை
தரமுன்னே துணிவாய் நின்றவர்!
சுதந்திரக் கனவுக் கண்டவர் - சுபாஷ்
சந்திர போஸ் எனும் பெயர் கொண்டவர்
அடிமை இருட்டை விலக்கிடவே
ஆதவனாய் உதித்த அருந்தலைவர்!
அந்நியர் ஆட்சியை எதிர்த்தவர் - சில
இந்தியர் சூழ்ச்சியால் வீழ்ந்தவர்
நம்பிய சிலரின் வஞ்சகத்தால் - மனம்
வெம்பியும் உறுதி பூண்டவர்!
மறகடிக்கப்பட்ட
மாபெரும் வீரன் - முழுமையாய்
மறக்க வைக்க முடியாத
மக்கள் தலைவன்!
அவர்
இறப்பில் இன்னும்
இரகசியம் உண்டு,
இறந்த பின்னும்
வாழ்கிறார் - மக்கள்
மனங்களை வென்று!
அன்று
இந்திய தேசிய இராணுவம் - அழித்தது
அந்நிய தேசத்தின் ஆணவம்
புண்ணிய பாரதம் இவர் பின்னாலே
அணிவகுத்து வந்தது - தாய்
மண்ணினைக் காத்திட தன்னாலே!
பிரித்து ஆளும் வெள்ளையரின் - சூழ்ச்சியைப்
புரிந்து வைத்திருந்த நல்லவர் - பூப்
பறித்து இருக்கும் கைகள் அல்ல - என
புரிய வைத்த வல்லவர்!
இவருக்கு
வடக்குத் தெற்கு பேதமில்லை
கிழக்கு மேற்கு தூரமில்லை
அடக்க நினைத்த எதிரிகளை - வெளியேற்ற
இலக்கு வைத்து போரிட்டவர்!
கண்களில் கனிவு
சொல்லிலே பணிவு
நெஞ்சிலே துணிவு - இதுவே
இவரது அடையாளம்,
இந்திய நலன் கருதி
சிந்திட செங்குருதி
கொண்ட ஓர் நெஞ்சுறுதி - இவருக்கு
அச்சம் என்பதே கிடையாது!
ஆயுதமேந்திய அரக்கருடன்
அகிம்சையால் வென்றிடமுடியாது
பீரங்கி கொண்ட எதிரியிடம் - வெறும்
கைகளால் போரிட முடியாது,
காகித கப்பல் தனைக்கொண்டு
கடலில் சென்றிட முடியாது
பாரதம் விடுதலை அடைந்திடவே - பெரும்
படையே விடையென உணர்ந்தாரே!
நினைவு முழுவதும் விடுதலை ஒன்றே
அணையா நெருப்பாய் எரிந்ததனால் - உயிரைப்
பணயம் வைத்து உயர்ந்த
பக்குவப்பட்ட ஒரு மனிதர்,
இணையம் இல்லா காலத்திலும்
இந்திய மக்களை ஒற்றுமையாய் - ஒன்
றிணைய வைத்த ஓர்
ஒப்பற்ற பெருந் தலைவர்!
இவரை
நேரில் கண்டிட வழியில்லை - இருப்பினும்
நேசம் வைத்தவர் பலருண்டு
வீரத்திற்கு மொழியில்லை என்பதை
இவர் பேச்சி லன்று உணர்ந்தனரே!
வீரம் விளைந்த பரந்தயிப் பாரதம்
வீரம் மறந்த வேளையில் உதித்து
வீரமும் விவேகமும் ஒருசேரக் கொண்டு - சுத்த
வீரனாய்த் திகழந்தார் வேங்கையாய் வெகுண்டு!
அவரது
பாதையை பின்பற்றி பாரதம் முழுவதும்
பல்லாயிரம் இளைஞர்கள் திரண்டனரே
கீதையில் கிருஷ்ணர் சொன்னதைப் போல்
தேசம் காப்பதே கடமையாய்க் கொண்டனரே!
செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர் சொன்ன
"ஜெய் ஹிந்த்" என்ற தேசிய சொல்லை - சுபாஷ்
சந்திர போஸ் என்ற வங்காளர் அன்று சொல்ல
இந்தியர் அனைவரும் சொல்கின்றனர் இன்றும்!
தேசிய கீதம் அதை தந்தவர்
இரவீந்திரநாத் தாகூர்
தேசிய படையை கொண்டு வந்தவர்
சுபாஷ் சந்திர போஸ்,
நாட்டுபற்று
வீசிய அவர்கள் பிறந்த மண்ணின்று
பிரிவினை பேசிடும் நிலைக்கண்டால்
வருந்தி திருந்திட சினம் கொள்வர்!
பங்காளி போல சண்டை யிட்டு
வங்காளம் இரண்டாய் பிரியுமென்று
எந்நாளும் கனவிலும் நினைத்திருப்பாரா?
முன்னாலே நின்று தடுத்திருப்பாரே!
மண்ணாளும் ஆசையில் சில சுயநலம் கொண்டோர்
கண்ணாகக் காத்திடும் கடமை மறந்து - திரைக்குப்
பின்னாலே திட்டங்கள் ஒவ்வொன்றாய்த் தீட்டி
பொன்னான நாட்டை துண்டாடி விட்டனர்
எந்நாளும் சரித்திரம் மன்னிக்கா தவர்களை!
கனிவைக் காட்டும் கண்கள்
அணிந்திருந்தும் கண்ணாடி
துணிவோடு எதிர்த்து நின்றார்
எதிரிகளின் முன்னாடி
அணிவகுத்தனர் இளைஞர்கள் அனைவரும்
வீர்மாய இவர் பின்னாடி
இந்திய இராணுவ வலிமைக்கு
இவர்தானே என்றும் முன்னோடி!
பாரிலே புகழ்பெற்ற பழம்பெரும் பாரதம் - எத்தனை
போரிலே வென்றொளி வீசிய மரகதம்
யாரிதை வந்து அபகரிக்க முயல்வது - என
சீறிய சிங்கத்தின் புகழ்
என்றென்றும் வாழ்க வாழ்கவே!
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்
பெயரைக் கேட்டாலே வீரம்
வந்திடும் பார்!
அன்புடன் என்றும்
நேதாஜி நேசன்
இராம்ஸ் முத்துக்குமரன்.